சனாதன ஸ்தோத்திரம் மற்றும் நூல்கள்
ஶ்ரேணீ ரஹித
ஆன்டா³ல

திருப்பாவை

तिरुप्पावै
இயற்றியவர்: பாரம்பரிக பார்த்தவர்கள்: 2
23px
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்! சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே, நமக்கே பறை தருவான், பாரோர் புகழப் படிந்தேலோர் எம் பாவாய். (1)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம் பாவாய். (2)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெநெல் ஊடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத், தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம் பாவாய். (3)

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம் பாவாய். (4)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத், தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத், தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை, தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம் பாவாய். (5)

புள்ளும் சிலம்பின காண்; புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்தரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய். (6)

கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய்! திறவேலோர் எம் பாவாய். (7)

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்; மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை கூவுவான் வந்து நின்றோம், கோது கலம் உடைய பாவாய் ! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா என்றாராய்ந்தருளேலோர் எம் பாவாய். (8)

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத், தூபம் கமழத் துயில் அணைமேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ ‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம் பாவாய். (9)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றம் உனக்கே பெருந் துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம் பாவாய். (10)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திரள் அழியச் சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! புற்றரவல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச், சிற்றாதே பேசாதே செல்லப் பெண்டாட்டி நீ எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம் பாவாய். (11)

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்! இனித் தான் எழுந்திராய்; ஈதென்ன பேர் உறக்கம்? அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம் பாவாய். (12)

புள்ளின் வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பின காண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீர் ஆடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம் பாவாய். (13)

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்தாம்பல் வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூரை வெண்பற் தவத்தவர், தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம் பாவாய். (14)

எல்லே இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ? சில் என்றழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!’ ‘ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்தெண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம் பாவாய். (15)

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்; ஆயர்சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்; வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம் பாவாய். (16)

அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும் எம் பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்; கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம் பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்; செம் பொற் கழல் அடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம் பாவாய். (17)

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன், நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட, செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம் பாவாய். (18)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்; மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை யேலும் துயில் எழ ஒட்டாய் காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோர் எம் பாவாய். (19)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்; செப்பம் உடையாய்! திரள் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்; செப்பன்ன மென் முலை செவ்வாய் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம் பாவாய். (20)

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்; மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம் பாவாய். (21)

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே, செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம் பாவாய். (22)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து, வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோர் எம் பாவாய். (23)

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி, சென்றங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி, வென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்று ன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம், இரங்கேலோர் எம் பாவாய். (24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத், தரிக்கிலான் ஆகி த் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம் பாவாய். (25)

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே, சாலப் பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோர் எம் பாவாய். (26)

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாகச், சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய். (27)

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா, நீ தாராய் பறை ஏலோர் எம் பாவாய். (28)

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய். (29)

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம் பாவாய். (30)
ஜப எண்ணிக்கை: 0/108
प्रतिलिपि (Copy) भयो!